பீமாகொரேகான் கலவர வழக்கில் கைதான சிந்தனையாளர்கள்.. உச்சநீதிமன்றம் கருத்து!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 28, 2018 04:23 PM
இந்திய தேசிய விரோத போக்குக்கு இடையூறு செய்ததாகக் கூறப்பட்டு, மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் உள்ளிட்ட எழுத்து-சமூக-களச்செயல்பாடு என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தவர்களை புனே காவல் துறையினர் கைது செய்தனர்.
1818-ல் மராத்தா பேஷ்வாக்களுக்கும் மஹாராஷ்டிர தலீத் மக்களுக்கும் இடையே நடந்த போரில், தலீத் மக்கள் வெற்றி பெற்றதன் 200-ம் ஆண்டினை கொண்டாடும் விதமாக பீமா கொரேகான் என்ற இடத்தில் கடந்த டிசம்பர் 31-ம் நாள் தலீத் மக்கள் ஒன்று கூடினர். அதன் அடுத்த நாளான ஜனவரி 1-ம் தேதி தலித்திய களசெயல்பாட்டாளர்களுக்கும், இந்து மராட்டியர்களுக்கும் இடையே உருவாகிய கலவரத்திற்கு காரணமான அர்பன் நக்ஸல்ஸ் என்கிற பெயரில் மேற்கண்ட சிந்தனையாளர்கள் உட்பட பலரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதுக்கான காரணம், பிடிவாரண்ட் உத்தரவு என எதுவுமே இல்லாமல், ஒருவரை கைது செய்ய அனுமதிக்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று சொல்லப்படும் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மேற்கண்ட சிந்தனையாளர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த விசாரணை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்த நிலையில், இதில் தலையிட முடியாது என்றுகூறியுள்ள உச்சநீதிமன்றம் மேலும் 4 வாரங்கள் வீட்டுக்காவல் உத்தரவை நீட்டிக்கொள்ள அனுமதி தந்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை போலீசாரின் தரப்பில் இருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்கிற விதியும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.