’ஓரினச்சேர்க்கை குற்றமா?'.. சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 06, 2018 12:45 PM
Homosexuality a crime? SC declares verdict on Section 377

ஓரினசேர்க்கை  நாட்டுக்கும், பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும், ஒழுக்க நெறிமுறை உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் முரணானது என்று ஒரு பார்வை இருந்தாலும், இன்னொரு பக்கம் இது ஒரு மன சிக்கல், உளவியல் நோய் என்றெல்லாம் கூறி தனிமனித உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.  இதனை அடுத்து உச்சநீதி மன்றத்தில் சில காலங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

 

தொடர்ந்து LGBT எனப்படும் ஆண், பெண், திருநங்கை, இருபாலின உறவு உள்ளிட்டவற்றை ஆதரிப்பவர்களின் தரப்பில் இருந்து  ஓரினச் சேர்க்கை என்பது சுய அன்பு, காதல் கட்டமைப்பு, ஒழுக்கக் கேடான செயல் என்று புறந்தள்ளி அந்த மனநிலையை விமர்சித்து அவர்களை காயப்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்லி சென்னை உட்பட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்தன. அதே சமயத்தில் கட்டாயத்தின் பேரில் அடிமைத்தனமாக ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்துவது குற்றம் என்பதையும் அவர்கள் பதிவு செய்தனர். தமிழகத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாலினி ஜீவரத்தினம் இயக்கிய ‘லேடீஸ் அண்ட் ஜெண்டில்வுமன்’ எனும் ஆவணப்படமும் இந்த கருத்தை வலுவாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் இந்தியாவில் நிலவி வந்த சூழலைப் பொருத்தவரை, ஆண், பெண் இருபாலரின் ஓரினச்சேர்க்கை மூலமும், இயற்கைக்கு எதிரான வகையில் மனிதர்கள் பிற உயிரினங்களுடன் கொள்ளும் உறவினாலும் வரக்கூடிய நோய்களை பல்வேறு அமைப்புகள் பட்டியலிட்டன. மேலும் இந்த உறவு கடுமையான குற்றம் என்றும், அரசியல் அமைப்பு சாசனத்தின்படி பிரிவு எண் 377 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ஓரினச் சேர்க்கையாளர்களை கைது செய்து அடைக்கலாம் என்றெல்லாம் இருந்தது.

 

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில், ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சரத்தான பிரிவு எண் 377ஐ, அரசியல் அமைப்பு சட்டத்தில்  இருந்து நீக்கியுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதன்படி, ’ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்துக்கு நிகரானது; ஒத்த பாலின உறவு என்பது அவரவர் விருப்ப உணர்வு, அதில் குற்றமிருப்பதாகத் தெரியவில்லை’ என்று சொல்லி 'Un Natural offences' அல்லது  ’உறுப்பு நுழைப்பு’ என்று பெயரிடப்படும் இயற்கைக்கு எதிரான உறவில், தன்பாலின அல்லது ஒத்த பாலின உறவுக்கு இருந்த தடையை நீக்கி, அதில் குற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பைப் பற்றிய பல்வேறு விமர்சனங்களும், ஆதரவுக் கருத்துக்களும் விவாதங்களும் எழத் தொடங்கியுள்ளன. உண்மையில் உச்சநீதிமன்றம், இந்த பல வருட வழக்கை முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #EQUALITY #NODISCRIMINATION #LGBTRIGHTS #LGBT #SECTION377