மாணவிகளை தவறாக நடத்த முயன்றதாக கூறப்பட்ட விடுதி உரிமையாளர் மரணம்
Home > News Shots > தமிழ்By Behindwoods News Bureau | Jul 26, 2018 11:40 AM

கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்றதாக வழக்கு பதியப்பட்ட கோவையை சேர்ந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் உடலை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிணற்றிலிருந்து போலீசார் மீட்டுள்ளனர். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜெகநாதனுக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை விடுதியின் வார்டன் புனிதா நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும் மேலும் ஜெகநாதனுக்கு வீடியோ காலில் அழைத்து மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாகவும் குற்றப் சாட்டப்பட்டிருந்தது.
மாணவிகளை மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் விடுதிக்கு திரும்பிய மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். தகவல் தெரிந்து அங்கு விரைந்த பீளமேடு போலீசார் ஜெகநாதன் மற்றும் புனிதா ஆகியோர் மீது வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் இதற்கிடையில் புனிதா மற்றும் ஜெகநாதன் மாயமாகியிருந்தனர்.
